Friday, January 27, 2012

என்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம் - 8



தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை இந்த தொடர் மூலம் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...

நான் சுஜாதா, பாலகுமாரன் இந்த இரு எழுத்தாளர்களின் தீவிர வாசகன்... தொடர்ந்து பாலகுமாரன் அவர்களின் எழுத்துகளை வாசித்து வந்தாலும், மிக சமீபத்தில் நிறைய பாலகுமாரன் எழுத்துகளை மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது... அப்படி நான் படித்ததில், என்னை கவர்ந்த அவரின் எழுத்துக்களை அடிக்கோடிட்டு, பின் அதை தனியே டைப் செய்து வைத்திருந்தேன்... அதையே உங்களுடன் பகிரலாமே, ஒரு தொடர் வடிவில் என்று நினைத்து இதோ, தொடங்கி விட்டேன்... ஒரு முழு புத்தகத்தை எடுத்து, படித்து அதில் இருந்து ஆங்காங்கே எனக்கு பிடித்த வரிகளை எடுத்து இந்த தொடரில் தந்திருப்பதால்,அது கோர்வையாக இராது... இருந்தாலும் தரப்பட்டுள்ள விஷயங்கள் படிக்க சுவாரசியமாகவே இருக்கும்...

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

”பிருந்தாவனம்” - ஸ்ரீராகவேந்திரர் பற்றிய சரிதம் : தொடர்ச்சி.......

பானை செய்தவன் குயவன் என்பதையும், நாற்காலி செய்தவன் தச்சன் என்பதையும் நாம் மறுத்ததுண்டோ...?
இல்லை... ஆனால் கடவுளை மறக்கவோ, அல்லது வேறு ரூப குணாதிசயங்கள் சொல்லவோ முற்படுகிறோம்... இதற்கு காரணம் நம்முடைய அறியாமை... அவன் யார் என்று தெரியாமல் வெறும் அனுமானத்தை வைத்துக்கொண்டு அங்கே நெருப்பு வருகிறாது என்று புகைக்கூண்டு சொல்வது போல நாம் கடவுள் இருக்க்கூடும் என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

கடவுளை தரிசித்த ஆன்றோர்களின் வாய்மொழி, நான் பார்த்திருக்கிறேன் என்று அவர்கள் அழுத்தம் திருத்தமாக சொல்லுகின்ற வாக்கியம் நமக்கு உதவி செய்யும்...

கடவுள் தேடுவதை இங்கு வாழும் நல்லவர்கள் விசாரித்துக் கொண்டுதான் இருப்பார்கள்... இது என்ன, இது என்ன என்று தவித்துக் கொண்டுதான் இருப்பார்கள்... ஜன சமூகத்தில் ஒரு பெரிய பகுதி, கேளிக்கைக் களியாட்டங்களில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்க, ஒரு சிறிய பகுதி எல்லா கால கட்டத்திலும் இடையறாது கடவுளை நோக்கி தன் குரலை எழுப்பிக் கொண்டிருக்கும். தன் பார்வையை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் என்று தெரிந்து அவர்களுக்கு உதவி செய்வதற்காக பல மகாவாக்கியங்களை கடவுளைக் கண்டபோது ஏற்பட்ட சிலிர்ப்பை வசனமாக, எல்லோரும் சொல்லி வைத்தார்கள்... சுருக்கமாக, அழுத்தமாக, நிறைவாக அந்த வாக்கியங்கள் இருந்தன... அந்த வாக்கியங்களை தொகுத்து நான்கு வேதங்களை நமது முன்னோர்கள் வைத்தார்கள்...

வேதம் என்பது ஒருவர் படைப்பல்ல... ஒருவரால் செய்யப்பட்ட நூல் அல்ல.. அதை யார் சொன்னார்கள் என்பது முக்கியமல்ல... அந்த வாக்கியங்கள் சொன்ன பல மகான்களின் பெயரும், ஊரும், வாழ்வும் நமக்கு தெரியாது... தெரிய வேண்டிய அவசியமும் இல்லை... அந்த வாக்கியம் தான் முக்கியமே தவிர, அந்த வாக்கியக்கார்ர் முக்கியமில்லை... கரண்டியிலிருந்து எடுக்கப்பட்ட பாயசம் தான் முக்கியமே தவிர, கரண்டி முக்கியமில்லை... அந்த பாயசத்தை கரண்டி தாங்கிக் கொண்டிருக்கிறது... நம் கைகளில் பாயசம் ஊற்றப்படுகிறது.. நாம் உறிஞ்சி குடித்து அதன் சுவையை அனுபவிக்கிறோம்... அந்த கரண்டி எங்கிருந்து வந்த்து, யார் செய்தது, என்ன உலோகம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோமா? இல்லை, வேண்டுமானால், இன்னொரு கை பாயசம் ஊற்று என்று கேட்போமே தவிர பாயசத்தை தாங்கிக் கொண்டிருக்கிற, பாயசத்தை நமக்கு எடுத்து வழங்கிய கரண்டியை நாம் கண்டு கொள்வதில்லை... காலம், கடவுளை அனுபவித்தவர்களை மெல்ல உதிர்த்துவிட்டு, அவர்களுடைய அனுபவத்தை மிகப்பெரிய பழமாக நம் கைகளிலே கொண்டு வந்து கொடுக்கிறது.. அதுவொரு அனுபவம்... அதுவொரு வழி... அதுவொரு அறிமுகம், அதுவொரு கண்டுபிடிப்பு, ஒரு வினாவுக்குண்டான உண்மையான விடை... சத்தியம், அது நிரந்தரம்... வேதத்திற்கு அழிவே இல்லை... அழிக்கவே முடியாத விஷயம் அது.. நெல்முனையளவும் கூட்டலோ, குறைத்தலோ இல்லாமல் மிக சத்தியமாக கடவுள் அனுபவத்தை மற்றவரோடு பகிர்ந்து கொள்கின்ற முயற்சி அது... ஞானத்தின் வாசல்... மனித அறிவில் கடைந்தெடுக்கப்பட்ட திரண்ட வெண்ணெய்... அமிர்த கலசம்...

தேடுவது என்பது என்ன? தேடப்படும் பொருள் என்று ஒன்று இருந்தால் தானே தேடுபவர் இருக்க முடியும்... அப்பொழுது தான் தேடுவது என்பது செய்கையாக முடியும்... தேடப்படும் பொருள், தேடுபவர், தேடுவது என்கிற செய்கை என்று மூன்று விஷயமாக இது பிரிகிறது...

இறைவனால் படைக்கப்பட்டது இவ்வுலகம் என்றால் இந்த உலகம் எப்படி மாயையாக இருக்க முடியும்... மயக்கத்தை தருபவனா இறைவன்... அசத்தியமான ஒரு விஷயத்தைக் காட்டுபவனா இறைவன்? இல்லையே... இறைவன் சத்தியமெனில், இறைவனால் படைக்கப்பட்ட இந்த உலகமும் சத்தியம்... இருப்பதை இல்லையென்று சொல்வதில் என்ன பயன், எதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும்?
நீங்கள் இடையறாது பக்தி செய்து வாருங்கள்... இடையறாது பூஜை செய்து வாருங்கள்... இடையறாது கடவுள் நாமத்தை சொல்லி வாருங்கள்... ஏதோ ஒரு கணம், ஏதோ ஒரு சோதனையில் உங்கள் மனம் கனிந்து பக்குவப்பட்டு விடும்.. பக்தியில்லாது இந்த பக்குவம் வராது... எனவே, பக்தி முக்கியம்... எதற்கு பக்தி என்றால்,  நீங்கள் கனிந்து இறைவன் காலடியில் இருப்பதற்கு... இறைவன் ஆவதற்கு அல்ல...
நல்லவர்கள் தங்கள் செயலை நானே செய்தேன் என்கிற கர்வத்தோடு ஒரு போதும் செய்வதில்லை.. என்னால் முடியாததா, என்னுடைய அதிகாரம் எவ்வளவு தெரியுமா, என் சாமர்த்தியம் எப்படி தெரியுமா என்று கொக்கரித்து தன்னுடைய காரியங்களில் அவர்கள் ஈடுபடுவதில்லை... மாறாக, என் செயலில் தன்னுடைய இறையனுபவமும், இறையின் கருணையும் படர்ந்திருக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள்...
குரு என்பவர் யார்?

தெய்வத்திற்கும் மேலானவர்... தெய்வம் கோபித்துக் கொண்டால், குரு உன்னை காப்பாற்றுவார்... ஆனால், குரு கோபித்துக் கொண்டால், தெய்வமும் காப்பாற்றாது...

ஒரு கண்டத்திற்கு தேவையென்றால் ஒரு தேசத்தை பலி கொடுக்கலாம்... ஒரு தேசத்திற்கு தேவையென்றால் ஒரு ஊரை பலி கொடுக்கலாம்ஒரு ஊருக்கு நல்லதென்றால் ஒரு கிராமத்தை பலி கொடுக்கலாம்ஒரு கிராமத்திற்கு சிறப்பு என்றால் ஒரு வீட்டை பலி கொடுக்கலாம்ஒரு வீட்டிற்கு நல்லதென்றால் அதில் ஒருவர் பலியாகலாம் தவறில்லைதியாகத்தின் மூலம் தான் திடமான, வலிமையான சமுதாயம் ஏற்படுகிறதுஏனோ தானோ என்று எந்த சமுதாயமும் வளரவில்லை.. அந்த சமுதாயம் வளர வளர பல பெரியோர்கள் தோன்றியிருக்கிறார்கள்அந்த பெரியோரின் சொந்த வாழ்க்கை முழுதுமாக சுகங்களை நாடியில்லாமல் சமுதாயத்தின் மேன்மையையே நாடி இருக்கிறது
புத்தியால் எடுக்கப்படுகின்ற எல்லா முடிவுகளும் இரட்டையானவைஇடதும், வலதும் அலைபவைஇது நல்லது என்று சமயமும், இல்லை அதுவே நல்லது என்று மறுசமயமும் புத்தி ஆட்டம் காட்டிக்கொண்டு தான் இருக்கும்….

மௌனத்திலிருந்து தான் சப்தம் பிறக்கிறதுசப்தத்தின் முடிவு மௌனம்….
மகத்தான காரியங்கள் செய்யும் போது சில வேடங்கள் அணிந்து தான் ஆக வேண்டும்சில நியமனங்களை கடைப்பிடித்துத்தான் ஆக வேண்டும்
துறவு என்றால் என்ன?

துறவு என்றால் பணம், காசு, சௌகரியங்களை துறப்பது அல்ல... அகந்தையை துறப்பது... அகந்தையை ஒருவர் குடும்பத்திலிருந்து கொண்டு துறப்பது முடியாத காரியம்... குடும்பம் என்று இருப்பதாலேயே ஏற்படும் அகந்தையைத் துறக்கவே முடியாது... எனவே, அகந்தையை துறக்க, குடும்பத்தை துறப்பதும் முக்கியமாக கருதப்படுகிறது....

தான் என்ற அகங்காரம் கொண்டவர்கள் தான் தன் அகந்தையை அழிக்க முடியாமல் தன் உடம்பை அழித்துக் கொள்வார்கள்....
இங்கு வருவதும், போவதும் இயற்கை... பிறப்பும், இறப்பும் சகஜம்... எப்போது பிறப்பு, எப்போது இறப்பு என்று எவருக்கும் தெரியாது... இது தான் வாழ்க்கையின் சூட்சுமம்.... ரகசியம்.. எனவே, நல்லதிற்கும், கெட்டதிற்கும் மனிதர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.. வருவாய்க்கும், இழப்புக்கும் ஒருவர் மனம் திறந்து தயாராக இருக்க வேண்டும்... இழப்புக்கு வருத்தப்படுபவர்கள் ஏதேனும் கிடைத்தால் அதிகம் ஆடுவார்கள்... வருவாய்க்கு அதிகம் ஆடுபவர்கள் தான் இழப்புக்கும் அதிகம் அலறுவார்கள்...

(இன்னமும் வரும்............)

2 comments:

Unknown said...

தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான
அனைத்தும் ஒரே இணையத்தில்....
www.tamilkadal.com

Ragavachari B said...

வீடு திரும்பல் மோகன் சார் மூலமா first time உங்க ப்ளாக் வரேன். எனக்கும் பாலகுமாரன் ரொம்ப பிடிக்கும்.
தலைப்பை பார்த்த உடனே இந்த கமெண்ட் போடணும்னு தோணிச்சி. சீக்கிரம் எல்லா போஸ்டையும் படித்துவிட்டு கமெண்ட்ஸ் போடறேன். நன்றி